புழல்: புழல், செங்குன்றம் பகுதிகளில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளில் பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடை இல்லாததால், அங்கு வரும் மக்கள் மழை மற்றும் கோடை வெயிலில் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இப்பகுதிகளில் வரும் மழைக் காலத்தை முன்னிட்டு பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். சென்னை புழல் அருகே சூரப்பட்டு, பாரதிதாசன் நகர் ஆகிய 2 இடங்களிலும், அம்பத்தூர் செல்லும் சாலையிலும், செங்குன்றம் செல்லும் சாலையிலும் நிறைய பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. இப்பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன் மழைநீர் கால்வாய் மற்றும் சாலை விரிவாக்கப் பணிகளின்போது அங்கிருந்த பேருந்து நிழற்குடைகள் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் இருந்து மாநகர மற்றும் அரசு பேருந்துகளில் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் மக்கள் மழை மற்றும் கோடை வெயிலின்போது, பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அகற்றப்பட்டதால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். அங்கு மீண்டும் பேருந்து நிழற்குடை அமைக்க வலியுறுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, புழல் மற்றும் செங்குன்றம் பகுதிகளில் மாநில நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் பேருந்து நிழற்குடை அகற்றப்பட்ட இடங்களில், வரும் மழைக்காலத்துக்கு முன்பு புதிதாக நிழற்குடையுடன் கூடிய பேருந்து நிறுத்தம் அமைப்பதற்கு சென்னை மாநகராட்சி மற்றும் மாநகர போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
The post நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தம்: புழல், செங்குன்றம் பகுதி மக்கள் அவதி appeared first on Dinakaran.